தர்மபுரி தொகுதியில் மருத்துவம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு
தர்மபுரி தொகுதியில் மருத்துவம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடஷ்வரன் நேரில் மனு அளித்தார்.
HIGHLIGHTS
சென்னையில் நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத்திட்டம் – தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை தொடக்க விழாவில் பங்கேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் மருத்துவம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி கோரிக்கை கடிதத்தை அளித்து வலியுறுத்தினார்.
தர்மபுரி மாவட்டத்தில் புதியதாக நல்லம்பள்ளி தாலுகா கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டு நல்லம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நல்லம்பள்ளி பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நல்லம்பள்ளியில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக கொண்டு புதியதாக அரசு வட்டார தலைமை மருத்துவமனை உருவாக்கவேண்டும்.
இண்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இண்டூரை மையமாக கொண்டு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மருத்துவமனையை தரம் உயர்த்தி 30 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக தரம் உயர்த்தல்.
சாமிசெட்டிப்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைத்தல். மானியதஅள்ளி ஊராட்சி ஜருகு கிராமத்தை மையமாக வைத்து - புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல். பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தை தரம் உயர்த்தி 30 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாக அமைத்தல்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சார்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்கான வருகின்றனர். இம்மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தல். தர்மபுரி சேலம் நெடுஞ்சாலை, தொப்பூர் மலைப்பாதையில் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தொப்பூரில் இயங்கும் அரசு ஆராம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி இன்னும் கூடுதலாக 30 படுக்கை வசதிகள் கொண்டு 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு மையத்துடன் இயங்கும் மருத்துவமனையாக அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்