100 ஆண்டாக வசிக்கும் எங்களை வெளியேற்றக்கூடாது: ஊட்டமலை தலைவு கொட்டாய் மக்கள் மனு
ஊட்டமலை தலைவு கொட்டாய் பகுதியில்100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பங்களை வெளியேற்றக்கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் திவ்யதர்சினியிடம் மனுக்களை அளித்தனர்.
பென்னாகரம் தாலுகா ஒகேனக்கல் ஊட்டமலை கிராம மக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், ஒகேனக்கல் பகுதிக்கு உட்பட்ட தலைவு கொட்டாய் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலைக்கு தெற்கே ஆற்றுக்கு வடக்கில் உள்ள ஓடை பகுதியில் பல குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். ஆடு, மாடு மேய்த்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகிறோம். வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது.
இந்நிலையில் ஒகேனக்கல் வனத்துறை சார்பில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து எங்களை வெளியேற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே நாங்கள் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து நிரந்தரமாக குடியிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஒட்டர் பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் 35 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எனவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் குடிநீர் வசதி கழிவுநீர் கால்வாய் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.