தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து கடலூரில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
மக்கள் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தாத ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. 4 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது, நான்கு மாவட்ட கழகச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், மற்றும் முன்னாள் அமைச்சர் எம். சி. தாமோதரன் தலைமையிலும், கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன், மேற்கு மாவட்ட கழகம் சார்பில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் இராஜேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை குறைக்க வலியுறுத்தியும்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள், பயிர் பாதிப்புகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஆளுங்கட்சியை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வன் முருகுமாறன், மற்றும் கடலூர் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.