கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் ; ஒருவர் கைது
Coimbatore News- கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
Coimbatore News, Coimbatore News Today- குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் இன்று சிங்காநல்லூர் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த அரிசி மற்றும் வாகன உரிமையாளரான பாலக்காட்டை சேர்ந்த சிவதாசன் (45) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, நீலிக்கோணம் பாளையம் பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள கொடும்பு பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.