திமுகவை பற்றி மற்றவர்கள் பேசப்பேச திமுக வளர்ந்து கொண்டே இருக்கும் : அமைச்சர் முத்துசாமி
Minister Interview தமிழகத்தில் திமுகவை பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்கள் இருப்பதால் தான் திமுக வளர்ந்து கொண்டே இருக்கிறது.
HIGHLIGHTS
Minister Interview
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வருகின்ற 13ம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தர உள்ளார். மேலும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இது தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வீட்டு வசதித் துறை அமைச்சர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். அப்போது நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணி குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்த நிகழ்ச்சிகளுக்கு கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிய உள்ளனர். கடந்த இரண்டு கூட்டங்களில் இடம் பெற்ற குறையால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஆகவே இந்த முறை சிறப்பான முறையில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் வகையில் போதுமான இட வசதி செய்து தரப்படுகிறது. தமிழகத்தில் திமுகவை பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்கள் இருப்பதால் தான் திமுக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு விழாவாக இருந்தாலும், மாற்றுக்கட்சியினரும் இதில் பங்கேற்கலாம்” எனத் தெரிவித்தார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,சார் ஆட்சியர் கேத்தீரின் சரண்யா மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.