பேருந்து நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை :சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கொரொனாவை கட்டுபடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் பேருந்து நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
கொரொனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிக அளவில் தாக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் கொரொனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இருப்பினும் கொரொனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பேருந்து நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலரும் இந்து மக்கள் கட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தலைவருமான சண்முகம் கூறுகையில்:- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களான செங்கல்பட்டு நகர பேருந்து நிலையம், தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், பல்லாவரம், மதுராந்தகம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கொரொனாவில் இரண்டாவது அலை தாக்க துவங்கி அதன் எண்ணிக்கையும் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது, பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த இது நாள் வரையில் மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது, காரணம் மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையங்களான செங்கல்பட்டு நகரம் மதுராந்தகம் திருப்போரூர் தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கட்டுப்பாடுகள் இல்லை, கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்வதால் கொரொனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பேருந்து நிலையங்களில் உள்ள சிற்றுண்டி கடைகளில் தின்பண்டங்கள் திறந்த நிலையில் மூடப்படாமல் இருப்பதாலும், செங்கல்பட்டு நகர பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை செயல்படாத காரணமாக பொது இடங்களில் அசுத்தம் நிறைந்து, நோய் தொற்று அதிவேகமாக பரவிவருகிறது, குறிப்பாக கோடைகாலம் வந்துவிட்ட நிலையிலும் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து கொரொனா பரவலை கட்டுப்படுத்த பேருந்து நிலையஙகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.