செங்கல்பட்டில் மழை நிவாரணம் கோரி பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி செங்கல்பட்டில் பா.ஜனதா சார்பில் நகரத் தலைவர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாவட்டத் தலைவர் வேதா சுபிரமணியம், ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையாக கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் ஏழை, எளிய மக்களும், நடுத்தரவர்க்க மக்களும் பெரிதும் பாதிப்படைந்தனர்.
வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து உடமைகள் பாழாகின. தினசரி வேலைவாய்ப்பை நம்பி இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். எனவே பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் தர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பா.ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பி.ஜே.பி யினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.