/* */

கருவைக் காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை

பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை

HIGHLIGHTS

கருவைக் காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை
X

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதர்

உலக மக்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லை என்றால் அது வெற்று வாழ்க்கை ஆகிவிடும். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு குழந்தைப் பேறுதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன.

மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அத்தகைய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்களே, சில நேரங்களில் மனித சக்தி, மருத்துவ சக்தியை விட தெய்வ சக்தி ஒன்றுள்ளது என்று நம்புகிறார்கள். தம்மை நம்பி வந்தவர்களுக்கும் வழிகாட்டுகிறார்கள். அப்படி தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.


முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார்.

கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள்.

அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு ‘நைதுருவன்’ எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை.

இவ்வாறு பூவுலகத்தில் முதல் ‘கருமாற்றம்’ செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.


இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.

முல்லைக் காடாக இருந்த இந்தத் திருத்தலத்தில், சுயம்புவாக உருவான இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் வடமொழியில் மாதவிவேனேஸ்வரர் என்றும், தமிழில் முல்லை வன நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இங்குள்ள மூலவருடையது, புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.

அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக, கற்பக விநாயகர் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மன் தனிக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். இந்த ஆலயத்தில் அம்மனே பிரதானமாக உள்ளார். அம்மன் நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். அம்மன் கோவிலுக்கு தனியாக ஒரு திருச்சுற்றும், எதிரே பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

இறைவன் – இறைவி கோவில்களுக்கு இடையில், முருகப்பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். வள்ளி– தெய்வானை இருபுறம் நிற்க, ஆறுமுகனாக, முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளதால், இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது.

திருக்கோவிலின் தல விருட்சமான முல்லைக்கொடி, சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் மட்டுமின்றி, திருக்கோவிலின் வெளிச் சுற்றுப் பகுதியிலும், நந்தவனங்களிலும் இருப்பதைப் பார்க்கும்போது, இந்தத் தலம் முற்காலத்தில் முல்லை வனமாக இருந்திருப்பதை உறுதி செய்கிறது.

கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளம், ‘ஷீரகுண்டம்’ (பாற்குளம்) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள் ஆகும்.

இந்தத் திருக்கோவில் அமைந்திருக்கும் ஊரில் வசிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பேறு வேண்டியும், சுகப்பிரசவம் நடைபெற வேண்டியும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து போகிறார்கள்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு. அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள். மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும். அம்பிகை சன்னிதியிலேயே ஒரு துலாக் கோல் இருக்கிறது.


சுயம்புவான முல்லைவன நாதருக்கு, புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால், தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக தோல் நோய் நீங்கும் என்பதும் அனுபவப்பட்டவர்களின் வாக்கு.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும், சனத்குமார முனிவரால், நாரதருக்கு எடுத்துச் சொல்லப்பட்ட பெருமைக்குரியத் தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

Updated On: 6 April 2024 4:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  2. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  3. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  4. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  9. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  10. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...