/* */

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய திருவள்ளூர் ஆட்சியர்

வருவாய்த்துறையினர், சுகாதார துறையினர், காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது

HIGHLIGHTS

சுதந்திர தினத்தை முன்னிட்டு  தேசிய கொடியேற்றிய திருவள்ளூர் ஆட்சியர்
X

சுதந்திர தின விழாவில்  திருவள்ளூர்   ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை அளித்தார்

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களை பறக்கவிட்டும், சமாதானப் புறாக்களையும் பறக்க விட்டார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 75- வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அணி வகுப்பை பார்வையிட்ட ஆட்சியர் , வானில் மூவர்ண பலூன்களை பறக்க விட்டும், சமாதானப் புறாக்களையும் பறக்க விட்டார்.

அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர், சுகாதார துறையினர், காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. .மேலும் சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அதே போல் சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கவுரவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தொடர்ந்து மாணவ மாணிவியரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 7 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 40 ஆயிரத்து 901 ரூபாய் மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் 4 பயனாளிகளுக்கு 12 லட்சத்து 61 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 383 ரூபாய் மதிப்பீட்டிலும், மீன்வளத்துறை சார்பில் 1 பயனாளிக்கு 12 லட்சத்து 61 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதே போல் முன்னாள் படை வீர்ர் நலம் சார்பில் 2 பயனாளிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 பயனாளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 2150 ரூபாய் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 6ஆயிரத்து 220 ரூபாய் மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.

மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் 1 பயனாளிக்கு 7 லட்சத்து 88 ஆயிரத்து 550 ரூபாய் மதிப்பீட்டிலும், வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 31 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பீட்டிலும் என 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிர்தது 801 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி., பெ.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதே போல் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் மகாபாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினார். அதே போல் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் தேசியக் கொடியேற்றினார்.

நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தேசியக் கொடியேற்றி வணக்கம் செலுத்தி இனிப்பு வழங்கினார். இதில் துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர் கே.ஆர்.கோவிந்தராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தேசியக் கொடியேற்றி வணக்கம் செலுத்தினார். இதில் துணைத் தலைவர் பர்க்கத்துல்லாகான், ஒன்றிய குழு உறுப்பினர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.காந்திமதிநாதன், இரா.வெங்கடேசன் கலந்து கொண்டனர்.அதே போல் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியகுழு பெருந்தலைவர் வெங்கட்ரமணா தேசியக் கொடியேற்றினார். துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தேசியக் கொடியேற்றினார். இதில் துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.பாலசுப்பிரமணி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.திருமழிசை பேருராட்சியில் பேரூராட்சி தலைவர் மு.வடிவேல் தேசியக் கொடியேற்றி வணக்கம் செலுத்தினார். இதில் துணைத் தலைவர் மகாதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




Updated On: 15 Aug 2022 11:30 PM GMT

Related News