கடல் வழியே ஊடுருவ முயன்ற 13பேர்; மடக்கிப்பிடித்து கைது செய்த கடலோர பாதுகாப்புக் குழு
காட்டுப்பள்ளியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில், இருவேறு இடங்களில் படகு மூலம் கடல் வழியே ஊடுருவ முயன்ற 13பேரை, கடலோர பாதுகாப்புக்குழுவினர் கைது செய்தனர்.
HIGHLIGHTS
காட்டுப்பள்ளியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் இருவேறு இடங்களில் படகு மூலம் கடல் வழியே ஊடுருவ முயன்ற 13பேரை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஏராளமான பொதுமக்கள், போலீசார் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திற்குள் கடல் வழியே படகு மூலம் ஊடுருவ முயன்ற 8பேரை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கைது செய்தனர்.
இதே போல மீஞ்சூர் காவல்துறையினர் சோதனையில் வடசென்னை அனல் மின் நிலையத்திற்குள் ஊடுருவ முயன்ற 5பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவேறு இடங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் போர்வையில் வந்த 13பேர் சிக்கினர். இன்று தொடங்கிய இந்த பயிற்சி ஒத்திகை நாளை மறுநாள் அதிகாலை வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.