உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்..!
பூந்தமல்லி அருகே சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2.3 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2.3 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பூந்தமல்லி அருகே பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 19.ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி அந்தந்த மாவட்டங்களின் சார்பில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோலப்பஞ்சேரி சுங்க சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி அம்சவேணி தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை மறித்து மேற்கொண்ட சோதனையில் வினோத் என்பவரால் வங்கி கலெக்ஷன் பணம் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 2.3கோடி கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு பணம் பறிமுதல் செய்து பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையில் வட்டாட்சியர் கோவிந்தராஜ் முன்னிலையில் பணத்தை சரி பார்த்து சீல் வைத்து பூந்தமல்லி கருவூலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டது. பூந்தமல்லி அருகே உரிய ஆவணம் என்று கொண்டு சென்ற 2.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.