பெண்ணை வழிமறித்து 10சவரன் தங்கச்சங்கிலி பறிப்பு
ஆவடியில் பெண்ணை வழிமறித்து 10 சவரன் தங்க நகைகள் பறிப்பு-பைக் ஆசாமிக்கு வலை
HIGHLIGHTS
ஆவடி, ராஜ்பாய் நகர் திருவள்ளுவர் 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஸ்ரீபிரியா (28). இவர் ஆவடி சின்னம்மன் கோவில் அருகில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை ஸ்ரீபிரியா வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டார். இவர் திருவள்ளுவர் தெரு மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு நபர் வழிமறித்து உள்ளார். பின்னர், அவர் ஸ்ரீபிரியா கழுத்தில் கிடந்த 10சவரன் எடை கொண்ட இரு தங்க சங்கிலிகளை பறித்து உள்ளார்.
இதையடுத்து அவர் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அழைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் தங்கச்சங்கிலிகளுடன் பைக்கில் மின்னல் வேகத்தில் சென்று தலைமறைவானார்.
இது குறித்து ஸ்ரீபிரியா ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தங்க சங்கிலிகளை பறித்து சென்ற பைக் ஆசாமியை தேடி வருகின்றனர்.