நெல்லையில் ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம் பறிமுதல்
நெல்லையில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
நெல்லை சந்திப்பில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான டன் மாம்பழங்கள் விற்பனைக்காக மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை கடைகளுக்கு தினமும் வந்து இறங்குகிறது. மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில், நெல்லையில் மாம்பழம் விற்பனையும் களைகட்ட தொடங்கியுள்ளது, மாம்பழம் இல்லாத பழக்கடைகளே இல்லை என்ற அளவில் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் மாம்பழங்கள் சுகாதாரமற்ற முறையில், ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்த நிலையில், மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா தலைமையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நெல்லை சந்திப்பில் கண்ணம்மன் கோவில் தெருவில் உள்ள பிரபல மொத்த விற்பனை பழக்கடையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது 500 கிலோ மாம்பழங்கள் ரசாயனக்கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து பழக்கடைகளில் சோதனை நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.