/* */

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மாதவையா கிருஷ்ணன் பிறந்தநாள்

இந்தியாவின் பிரபல இயற்கை ஆர்வலரும் எழுத்தாளருமான மா.கிருஷ்ணன் என்று அழைக்கப்படும் மாதவையா கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.

HIGHLIGHTS

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மாதவையா கிருஷ்ணன் பிறந்தநாள்
X

மா.கிருஷ்ணன் 

இந்தியாவின் பிரபல இயற்கை ஆர்வலரும் எழுத்தாளருமான மா.கிருஷ்ணன் என்று அழைக்கப்படும் மாதவையா கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.

திருநெல்வேலி அருகில் உள்ள தச்சநல்லூரில் 1912 ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார் . அவருடைய தந்தை அ.மாதவையா புகழ்பெற்ற எழுத்தாளர். இளம் வயதிலேயே அவர்களது குடும்பம் சென்னை, மயிலாப்பூரில் குடியேறியது. அந்த நாட்களில் அங்கு நிறைய மரங்கள், செடி, கொடிகள், ஏராளமான பறவைகள், விலங்குகள் இருந்ததால், தான் நேசிக்கும் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வந்தார்.


இந்து உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். 1925-ல் தந்தை இறந்த பிறகு, பெரிய அக்காவின் பராமரிப்பில் வளர்ந்தார். 1931-ல் மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு இயற்கையை ஆராதிக்கும் ஃபைசன் என்ற தாவரவியல் பேராசிரியரால் கவரப்பட்டார்.

சிறு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியும், கேலிச்சித்திரங்கள், படங்கள் வரைந்தும் வருமானம் ஈட்டினார். புகைப்படக் கலையில் சிறந்து விளங்கினார். கர்நாடக மாநிலம், பெல்லாரி அருகே இருந்த சந்தூரின் மகாராஜா 1942-ல் இவரை அங்கு வந்து பணியாற்ற அழைத்தார்.அங்கு பள்ளி ஆசிரியர், நீதிபதி, மகாராஜாவின் அரசியல் செயலாளர் எனப் பல பணிகளையும் செய்து வந்தார். அத்துடன் காடுகளில் சுற்றி அலைவது, இயற்கையை ரசிப்பது, ஆடு வளர்ப்பது, தபால் சேவைக்காகப் புறாக்கள் வளர்ப்பது மற்றும் எழுதுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இவர்தான். பறவைகளைத் தேடி காட்டுக்குச் செல் வார். இவரைத் தேடி பறவைகள் வரும். தன் கையெழுத்தைக்கூட பறவை பறப்பது போலவே போடுவார் எனக் கூறப்படுகிறது.தன் சிந்தனைகளை, கருத்துகளை வெளியிட கட்டுரைகள், கவிதைகள், படங்கள் மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் ஒரு சாதனமாகப் பயன்படுத்திக் கொண்டவர். 1950 முதல் இறுதிவரை கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் 'தி ஸ்டேட்ஸ்மேன்' நாளிதழில் தொடர்ந்து வாரம் இருமுறை 'கண்ட்ரி நோட் புக்' என்ற தலைப்பில் இயற்கை வரலாறு பற்றி எழுதி வந்தார்.

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதும் திறன் பெற்றிருந்தார். இவரது படைப்புகள் தமிழின் சுற்றுச்சூழல் முன்னோடி படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. வன உயிர்கள் குறித்த இவரது படைப்புகள் அனைத்தும் நேரடிக் கள ஆய்வு அனுபவங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை.ஆங்கிலத்திலும் நிறைய எழுதி வந்தாலும், தமிழில் எழுதும்போது பறவைகள், விலங்குகள், தாவர இனங்கள் இவற்றுக்கான தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடி பயன்படுத்துவார். வன உயிர்கள் புகைப்படவியல் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதினார்.

சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில் இவர் எழுதிய பறவைகள் குறித்த கட்டுரைகள் 'பறவைகளும் வேடந்தாங்கலும்' என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'ஜங்கிள் அன்ட் பேக்யார்ட்', 'நைட்ஸ் அன்ட் டேஸ்' என்ற பெயரில் நூல்களாக வெளியிட்டார்.


இயற்கை, சூழலியல் களத்தில் இவரது பங்களிப்புகளுக்காக ஜவஹர்லால் நேரு ஃபெலோஷிப் வழங்கப்பட்டது. 1970-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். இயற்கைப் பாதுகாவலர், சூழலியல் ஆர்வலர், புகைப்படக் கலைஞர், ஓவியர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட மா.கிருஷ்ணன் 1996-ம் ஆண்டு 84-ம் வயதில் மறைந்தார்.

Updated On: 30 Jun 2021 2:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை