பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் கூட்டமைப்பு காத்திருப்பு போராட்டம்
The Deaf Federation is holding a sit-in protest
HIGHLIGHTS
உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்.
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தங்களுக்கு தனியார் வேலை வாய்ப்பில் 1% வேலை வழங்கிடவும், வறுமை கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிடவும், ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம் எங்கே ? மாதாந்திர உதவித்தொகையை ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்கிடவும், வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
மேலும் எங்களுக்கு ஆவின் பாலகம் அமைத்துக் கொடுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எங்கே என்று கேள்வி எழுப்பினர். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிடவும், கோகோ கோலா நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும், அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட காது கேளாதோர் மகளிர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை செய்கைகள் மூலம் விளக்கினர்.