தூத்துக்குடியில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது : கனிமொழி எம்பி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி கூறினார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை கனிமொழி எம்பி இன்று தொடங்கி வைத்தார். இதில் விமான நிலைய ஊழியர்கள், காவலர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி.செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஊழியர்கள் 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பரவலை குறைக்கும் விதமாக மாவட்டத்தின் அனைத்து துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும், அணைத்து பகுதி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடியில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமானோர்க்கு 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலைய விரிவாக்க சுற்றுச்சுவர் கட்டும் பணி, இரவு நேரங்களில் விமானம் தரை இறங்குவதற்கு வல்லநாடு மலைப்பகுதியில் சமிக்கை டவர் அமைக்கும் பணி, விமான நிலைய ஓடுபாதை நீளம் அதிகப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவை அனைத்தும் விரைவில் நிறைவு பெறும்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மேலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.