தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சலவைத் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்...
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சலவைத் துறையில் உள்ள கடைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி சலவைத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 1000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் அமைத்தர், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பூங்கா சீரமைப்பு, அறிவியல் பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சலவைத் துறை நவீன சலவைக் கூடமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அந்த சலவைத் துறையில் பணி செய்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளர்கள் தங்களுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன சலவைத் துறையில் கடை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சலவைத்துறை அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும் நவீன சலவைத் துறையில் வெளி ஆட்களுக்கு கடை ஒதுக்கக் கூடாது என்றும் பல்வேறு கட்ட போராட்டத்தில் சலவைத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே,சலவை தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன சலவைத் துறையில் கட்டப்பட்டுள்ள கடைகள் ஏற்கெனவே இருந்த சலவை தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தாக கூறப்படுகிறது.
எனவே, நவீன சலவைத் துறையில் உள்ள கடைகளை சலவைத் தொழிலாளர்களுக்கு ஒதுக்க வேண்டும், பூங்காவை அகற்றிவிட்டு சலவைத் தொழிலாளர்களுக்கு துணிகளை காய வைப்பதற்கான இடமாக அதை மாற்ற வேண்டும், புதிதாக கட்டப்பட்டுள்ள சலவைத் துறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சலவைத் தொழிலாளர்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்பதால் சலவைத் தொழிலாளர்கள் போராட்டம் காரணமமாக ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.