தூத்துக்குடி காவல் துறையின் பழைய வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புகிறீர்களா?
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் மார்ச் 29 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் காவல் துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு கழிவு செய்யப்பட்டு புதிய வாகனங்கள் வாங்கப்படும். அவ்வாறு கழிவு செய்யப்படும் வாகனங்களை அதிகாரிகள் குழு ஆய்வு செய்த பிறகு பொது ஏலம் விடப்படுவது வழக்கம்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் மார்ச் 29 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 28.03.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 28.03.2023 அன்றே ரூபாய் 2000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரியாக 18 சதவீதத் தொகை முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு 9443382974, 9498196359 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.