ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தொழில்கள் முடக்கம்.. ஆட்சியரிடம் முறையீடு…
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில் தொழில்கள் முடங்கி உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிந்த நிலையில், ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினும், ஆலையை அகற்ற வேண்டும் என மற்றொரு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, தூத்துக்குடி திரேஸ்புரம், மட்டக்கடை, லயன்ஸ்டவுன், லூர்தம்மாள்புரம், புதுத்தெரு, மாதா கோவில் தெரு, அன்னை தெரசா மீனவர் காலனி, பாத்திமாநகர் ஆகிய கடலோர பகுதி மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள குமாரரெட்டியாபுரம், அய்யனடைப்பு, பண்டாரம்பட்டி, மடத்தூர், தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், தெற்கு சிலுக்கன்பட்டி, காயலூரணி, புதூர் பாண்டியாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று அளித்த மனு விவரம் வருமாறு:
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த நான்கு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இங்கு வேலைபார்த்து வந்த பலர் தற்போது வெளிமாநிலங்களில் சென்று வேலைபார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொழில்கள் முடங்கி உள்ளது. எனவே படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மனு அளித்தவர்களில் சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், சில்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்தனமாரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அந்த ஆலையை சுற்றியுள்ள 21 கிராம மக்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. காப்பர் தட்டுப்பட்டால் கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளில் மோட்டார் கம்பெனிகள் கிட்டத்தட்ட 400 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துறைமுகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்த எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. படித்த இளைஞர்கள் பலர் வேலை இல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களிலும் வெளி மாநிலங்களும் சென்று வேலை பார்க்கும் நிலைமை உள்ளது அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து குழந்தைகள் கல்வி உதவித்தொகை, அறுவை சிகிச்சை நலத்திட்ட உதவியும் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொய்யான வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. எனவே அரசு கருணை கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.