வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல். கடத்தியவர்கள் தப்பியோட்டம்
HIGHLIGHTS
தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் தட்டார்மடம் அருகே வாலத்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வேன் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் சிலர் வந்தனர்.
அவர்கள் போலீசாரைக் கண்டதும், வேன், மோட்டார் சைக்கிள்கள்களை சாலையோரம் நிறுத்தி விட்டு, இருளில் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் சோதனை செய்தனர். இதில் வேனில் ஏராளமான மூட்டைகளில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இந்த ரேஷன் அரிசியை அவர்கள் வேனில் கடத்தி வந்துள்ளனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் வேனையும், மோட்டார் சைக்கிள்களையும் விட்டு விட்டு தப்பி ஓடியது தெரிந்தது. இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த ரேஷன் அரசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? எங்கு கடத்தி செல்லப்பட்டது? கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.