ஆயிரம் ஆடு, 10 வேன்களில் சாதம்,10 ஆயிரம் ஆண்களுக்கு விருந்து
திருவோணம் அருகே 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் கோவில் பூஜையில் 1000 ஆட்டு கிடாக்கள் வெட்டி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தை அடுத்து தளிகை விடுதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லபெரம அய்யனார், செம்முனி, முத்து முனி கோவில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது
இந்த கோவிலில் கடந்த இருநூறு வருடங்களாக பாரம்பரிய முறைப்படி ஆடி வெள்ளிக்கிழமையன்று கிடாவெட்டு பூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி நேற்று இரவு இந்த விழா தொடங்கியது .
விழாவில் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய செம்மறியாடு , வெள்ளாடு என ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டு கோவில் அருகிலேய கறி குழம்பு தயார் செய்யப்பட்டது. 100 மூட்டை அரிசி கொண்டு சாதம் வடிக்கப்பட்டு 10 வேன்களில் கொண்டுவரப்பட்டது.
இன்று காலை 8 மணி முதல் சுற்றுவட்டார 25 கிராமங்களை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், ஆண்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைவரும் தரையில் அமர்ந்து வாழை இலையில் கறி விருந்து உண்டு மகிழ்ந்தனர்.