தஞ்சை மாவட்டத்தில் 40 % மாணவ மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வருகை: ஆட்சியர் தகவல்
மாவட்டத்தில் பணியாற்றும் 14,677 ஆசிரியர்களில் 96% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டத்தில் 40 சதவிகிதம் மாணவ மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 96% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 227 அரசு பள்ளிகள், 62 அரசு உதவிபெறும் பள்ளிகள், 97 மெட்ரிக் பள்ளிகள், 24 சுயநிதி பள்ளிகள்,28 சிபிஎஸ் பள்ளிகள் என மொத்தம் 438 பள்ளிகளில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில், முதல் நாளில், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்
மேலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் தேவையான முககவசம், கிருமிநாசினி ஆகியவை தயார் நிலையில் இருப்பதாகவும், தஞ்சை மாவட்டத்தில் 14,677 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 96% பேர் தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.