கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தா விட்டால் பட்டினி போராட்டம் : பள்ளிச்சிறுமி கடிதம்
கடந்த சில நாட்களுக்கு முன் கடையம் சின்னத்தேர் திடலில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
HIGHLIGHTS
கடையம் பகுதியில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் பட்டினி போராட்டம் நடத்த உள்ளதாக பள்ளி குழந்தைகள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து கனிமவளங்கள் தினமும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை தடுக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கடையம் சின்னத்தேர் திடலில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்தநிலையில், கீழ கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத் மகன் அஸ்வின் சுப நாத் (LKG) மற்றும் பூமிநாத் தம்பி சந்திரசேகர் மகள்கள் 6 -ம் வகுப்பு படிக்கும் சுப. பிரியங்கா, 4 -ம் வகுப்பு படிக்கும் சபிதா ஆகிய 3 பேரும் கடந்த சில தினங்களாக பூமிநாத் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் கனிம வள கொள்ளையை கண்டித்து போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இதுகுறித்து இவரது குழந்தைகள் சுப பிரியங்கா, சபிதா தங்கள் தாயாரிடம் விவரம் கேட்டுள்ளனர்.தொடர்ந்து இவர்கள் இருவரும் மற்றும் அவர்களது தம்பி அஸ்வின் சுபநாத் ஆகிய 3 பேரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கனிமவளத்தை தடுத்த நிறுத்தாவிட்டால் வரும் 14 - ஆம் தேதி கடையம் சின்னத்தேர் திடலில் பட்டினி போராட்டம் நடத்த போகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.கனிம வள கொள்ளையை தடுக்க சிறுமிகள் முதல்வருக்கு எழுதிய கடிதம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது