தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மடத்துப்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்டது மடத்துப்பட்டி கிராமம். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள கலிங்கன்குளத்தில் இன்னும் 20 தினங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், சொக்கம்பட்டி கிராமம் புன்னையாபுரம் முந்தல் மலையில் பெய்கின்ற அருவி நீரை, தங்கள் குளத்திற்கு திருப்பி விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கடையநல்லுர் வட்டாட்சியர் தலைமையில், திருவேட்டநல்லூர் மற்றும் புன்னையாபுரம் பகுதி மக்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எடுக்கப்படவில்லை. முந்தல் மலையில் தற்போது அதிக அளவு நீர் வரத்து உள்ளது. இந்த நீரானது புன்னையாபுரம் கிராமத்தில் உள்ள மாடன் சேர்வை குளத்திற்கு சென்று அங்கிருந்து தாதம்பட்டி மற்றும் சூர்யநாராயனபேரி குளங்கள் வழியாக கடலில் கலக்கிறது.
வீணாக கடலில் கலக்கிற தண்ணீரை மடத்துப்பட்டி கிராம விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தங்கள் பகுதி கலிங்கன்குளத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரி, அப்பகுதி விவசாயிகள், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வழங்க திரண்டு வந்தனர். கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.