பெண் உறுப்பினர்களை அவதூறாக பேசிய ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்; போலீசில் புகார்
பெண் உறுப்பினர்களை அவதூறாக பேசிய ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மீது, மாவட்ட எஸ்.பி யிடம் புகார்மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
பெண் உறுப்பினர்களை தரக்குறைவாக பேசிய திமுக ஒன்றிய பெருங்குழு துணைத் தலைவரால், ஆவேசம் அடைந்த பெண் உறுப்பினர்கள், இன்று மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டத்தில், கடையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், 23 பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பஞ்சாயத்துக்களில் இருந்து, 11 திமுக, ஐந்து அதிமுக, ஒரு காங்கிரஸ் என 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் திமுக உறுப்பினரான செல்லத்தாய் தலைவராகவும், திமுக உறுப்பினரும், திமுக ஒன்றிய செயலாளருமான மகேஷ் மாயவன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடையம் ஒன்றியத்தில் மாதந்தோறும் உறுப்பினர்கள் பங்கேற்கும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்திற்கான கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்பொழுது கடையம் அதிமுக 9 வார்டு உறுப்பினர் தங்கம், திமுக துணை தலைவர் மகேஷ் மாயவனை (திமுக வடக்கு ஒன்றிய செயலாளர்) நோக்கி, 'எங்களைப் பற்றி, பொதுவெளியில் எவ்வாறு தரைக்குறைவாக பேசலாம்' என்றும், 'இதைப்பற்றி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில், கேட்போம்' எனக் கூறினார். 'கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடும் நீங்கள், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்,' என ஆவேசமாக மகேஷ் மாயவனை நோக்கி சென்று கேட்க, அங்கு பரபரப்பு நிலவியது, மேலும், 'சாதியை சொல்லியும், எங்களை எப்படி பேசலாம்,' என்று கேட்க பெண் உறுப்பினர்களோடு, மற்ற உறுப்பினர்களும், உறவினர்களும் கேட்க சிறிது நேரத்தில் வாக்குவாதம் அதிகரித்து, ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் மகேஷ்மாயவனின் ஆதரவாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பின்பக்க வாசல் வழியாக அவரை கூட்டிசென்று போலீசார் உதவியுடன் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கை விட்டு வெளியே சென்றனர். இந்த நிகழ்வின் போது திமுக உறுப்பினர்கள் உட்பட அனைவரும், பெண் உறுப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் திமுக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தன்னை ஜாதி ரீதியாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கூறியதாகவும், எனவே அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மற்றும் தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக 9வது வார்டு பெண் உறுப்பினர் தங்கம் , கடையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால், இன்று மாவட்ட போலீஸ் எஸ்.பி யை சந்தித்து, அதிமுக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களான, தங்கம், இசக்கியம்மாள், ஜனதா, மணிகண்டன் உட்பட அதிமுக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மகேஷ் மாயவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனு அளித்தனர்.