தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு. மாணவ மாணவிகளுக்கு மலர் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்.
HIGHLIGHTS
19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு மலர் மற்றும் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கொரோனா தொற்ற கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் மாணவர்களின் கற்றல் இழப்பையும், இடைவெளியையும் சரி செய்யும் பொருட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் 309, நடுநிலைப்பள்ளிகள் 65, அரசு உதவி பெறும் பள்ளியில் தொடக்கப்பள்ளிகள் 376, நடுநிலைப்பள்ளிகள் 120, தனியார் தொடக்கப்பள்ளிகள் 156, நடுநிலைப்பள்ளிகள் 21 மொத்தம் தென்காசி மாவட்டத்தில் 1047 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி பேரூந்துகளில் முதலுதவி பெட்டி, அவசர கதவு, படிக்கட்டுகள், தீயணைப்பான் போன்றவற்றை வட்டார போக்குவரத்து ஆய்வு செய்தனர். தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி குழந்தைகள் காலை முதலே ஆர்வத்துடன் வந்தனர்.
பள்ளி கட்டிடத்தில் மாநில மரம், பறவை, மலர், மற்றும் உடல் உறுப்புகள், ஐவகை நிலங்கள் உட்பட ஏராளமான ஒவியங்கள் வரையப்பட்டிருந்தது. பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு வகுப்புகள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் குழந்தைகளை வரவேற்றனர்.