செகந்திராபாத்- ராமேஸ்வரம் ரயில் இனி சிவகங்கையில் நிற்கும் :ரயில்வேதுறை தகவல்
கோரிக்கையை நிறைவேற்றிய ரயில்வேதுறையின் அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியும் வரவேற்பையும் தெரிவித்தனர்
HIGHLIGHTS
செகந்திராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சிவகங்கையில் நின்று செல்லகிம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவகங்கை மக்கள் எளிதில் திருப்பதி சென்று வர ஏதுவாக செகந்திராபாத்- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சிவகங்கையில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மாவட்ட தலைநகரான சிவகங்கையில் நின்று செல்வதில்லை. இதனால் சிவகங்கை மாவட்ட மக்கள் பிற மாநிலங்களில் உள்ள ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது சிவகங்கை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் சிவகங்கையைத்தவிர்த்து, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கின்றன.
இந்நிலையில், திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே ராமேஸ்வரம் திருப்பதி வழியாக செகந்திராபாதுக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில் சிவகங்கையில் நிற்காது என முதலில் அறிவித்திருந்தனர். இதையடுத்து, சிவகங்கை நகர் மக்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் மத்திய ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும் செகந்திராபாத்- ராமேஸ்வரம் ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து செகந்திராபாத்- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சிவகங்கையில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியும் வரவேற்பையும் தெரிவித்தனர்.