கள்ளக்காதலால் சீரழிந்த குடும்பம் !
சங்ககிரி அருகே வறுமை காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி புதுவளவு பகுதியைச் சேர்ந்த பிரியங்கா, சரத்குமார் தம்பதியினர். இவர்களுக்கு கிருத்திக்குமார் என்ற 6 வயது மகனும் மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரியங்காவிற்கு பார்த்திபன் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் சரத்குமார் பிரியங்காவின் தந்தை தங்கவேல், சகோதரர் நந்தகுமார் ஆகிய 3 பேரும் கள்ளக்காதலன் பார்த்திபனை கொலை செய்த வழக்கில் மூன்று பேரையும் சங்ககிரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் பிரியங்காவின் தந்தை தங்கவேலுவுக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. இதனிடையே குழந்தைகளை கவனிக்க முடியாமல் வறுமையின் காரணமாக இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு பிரியங்காவும் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பிரியங்காவின் மகன் கிருத்திக்குமார் மட்டும் உயிருடன் இருந்ததை அறிந்து அவசர ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் பிரியங்காவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தால் வறுமைக்கு தள்ளப்பட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.