சேலத்தில் கோடையைப் போல் கொளுத்தும் வெயில் :ரோடுகள் வெறிச் ...
சேலத்தில் கோடையைப் போல்
கொளுத்தும் வெயில் :ரோடுகள் வெறிச்
சேலத்தில் நேற்று அடித்த வெயிலின் அளவு அதிகமாக இருந்ததால் பகல் நேரங்களில் ரோடுகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தினைப்பொறுத்தவரை வழக்கமாகவே ஏப்ரல் , மே உள்ளிட்ட மாதங்களில் வெயில் அதிக பட்சமாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த வெயிலானது பிப்ரவரி மாத இறுதிமுதலே அதிகமாக காணப்படுகிறது. மாறி வரும் தட்பவெப்பநிலை, ஓசோன் படலம் சேதம் உள்ளிட்டவைகளினால் வெயிலின் பாதிப்பு கடுமையாக இருந்தது.
பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் ரோடுகள் அனைத்தும் வெறிச்சோடிக்காணப்படுகிறது. தற்போது ஜெர்மனியிலும் வெயிலின் பாதிப்பு கடுமையாக இருப்பதாகவும் நீர்நிலைகளை நோக்கி அங்குள்ள மக்கள் படையெடுப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ஓசோனின் படல பாதிப்பு இருக்குமா? என்று நினைக்க தோன்றும் வகையில் உலகின் பல நாடுகள் இன்று வெயிலினால் தகித்துக்கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்டத்தினைப்பொறுத்தவரை எப்போதுமே பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் பாதிப்பு கடுமையாக இருக்கும். அவ்வப்போது வருணபகவான் கருணை காட்டினால் சீதோஷ்ணம் குளிர்ச்சியடையும். அதுவும் ஏற்காடு மலைப்பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்தால் சேலம் மாநகருக்கு வரப்பிரசாதம் உடனே மழை பெய்ய துவங்கிவிடும். அந்த வகையில் சேர்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஏற்காடு தமிழகத்தில் கோடை வாசஸ்தலமாக கருதப்பட்டு ஏழைகளின் ஊட்டி என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.
சுளீர் வெயில்
நேற்று சேலம் மாநகரைப்பொறுத்தவரை வெயிலானது உச்சபட்சமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் ரோடுகளில் நடமாடவே இல்லை .வாகனங்களில் செல்வோரின் கைகளில் வெயிலானது சுளீர் என பட்டதால் பலர் பரிதவித்ததைக் காண முடிந்தது. கூல்டிரிங்ஸ், கோன்ஐஸ்கிரீம் விற்பனை, ஜூஸ் கடைகளில் வியாபாரம் களை கட்டியது. பலர் வெயிலுக்கு பயந்து வெளியே வரவில்லையா? என்று தோன்றும் வகையில் எங்கு பார்த்தாலும் ரோடுகள் வெறிச்சோடிக்காணப்பட்டது. கலிகாலத்தில் எல்லாம் மாற்றி தான் நடக்குமா? வழக்கமாகவே கோடைக்காலத்தில் உச்ச பட்ச வெயில் அடிக்கும்.அதுவும் அக்னிநட்சத்திர காலத்தில் சொல்லவே தேவையில்லை. வெயிலின் பாதிப்பு கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டினைப்பொறுத்தவரை அக்னி நட் சத்திர காலத்திலும் கோடை மழை பெய்ததுதான் அதிசயம் என்று கூட சொல்லலாம்.