ஓமலூர் பகுதியில் டீ கடையை அடித்து நொறுக்கும் போலீஸ் : சிசி டிவி கட்சி வீடியோ வைரல்
ஓமலூர் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் டீ கடையை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
HIGHLIGHTS
ஓமலூர் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் டீ கடையை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சேலம் மாவட்டம் ஓமலூரில் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. சேலம் மாநகரில் இருந்து தர்மபுரி எல்லை தொப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக இந்த போலீஸ் ஸ்டேஷன், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தை குறைக்கும் நெறிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் ஜெய்சங்கர் என்ற இன்ஸ்பெக்டர் இரவு பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தேசிய நெடுஞ்சாலையை விட்டு ஓமலூர் தாரமங்கலம் சாலையில் ரோந்து சென்றதாக தெரிகிறது. மேச்சேரி பிரிவு ரோடு என்ற இடத்தில் புலியம்பட்டியை சேர்ந்த ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமானடீ கடை உள்ளது.
அந்த டீ கடைக்கு சென்ற இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், ஏன் இன்னும் கடையை மூடவில்லை என கேட்டு அங்கிருந்த சேர்களை அடித்து உடைத்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு இன்ஸ்பெக்டரே இப்படி நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்பெக்டர் மீது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.