முதியவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்து மோசடி செய்த இளைஞர் கைது
இவரிடம் இருந்து 5 செல்போன்கள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் முதியவரை ஏமாற்றி அவருடைய ஏடிஎம் கார்டை திருடி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 1.80 லட்சம் எடுத்து மோசடி செய்த இளைஞர் கைது அவரிடமிருந்து 5 செல்போன்கள் ரூ 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் சதாசிவம் என்ற முதியவர் இன்று காலை தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர் அவருக்கு உதவுவது போல் நடித்து அவரின் ஏடிஎம் பின் நம்பரை அறிந்துகொண்டு அவரிடம் போலியான ஏடிஎம் கார்டு அளித்துவிட்டு சதாசிவத்தின் ஏடிஎம் கார்டை திருடிச் சென்றுவிட்டார்
இதனையடுத்து சிறுது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ1.80 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக சதாசிவத்திற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது அப்போதுதான் அவரிடம் அந்த நபர் அளித்த ஏடிஎம் கார்டு போலியானது என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து சதாசிவம் வாலிபர் ஒருவர் தன்னை ஏமாற்றி எனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்துவிட்டதாகக்கூறி, புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் குருநாதன் தலைமையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் நகர பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று இரவு கீழ ராஜ வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்ததில், அந்த இளைஞர் தோகமலையைச் சேர்ந்த ஜார்ஜ் என்பதும் அவர் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த ஜார்ஜ் தான், சதாசிவத்தின் ஏடிஎம் கார்டையும் திருடி அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 5 செல்போன்கள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஜார்ஜ் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.