பக்தர்கள் 50% அனுமதியுடன் கோயிலை திறக்க வேண்டுமென பூ விவசாயிகள் கோரிக்கை
ஓட்டல்- தியேட்டர்கள் 50% இயங்கஅனுமதி அளித்ததைப்போல் கோயில்களிலும் 50% பக்தர்களுடன் அனைத்து நாள்களிலும் அனுமதி தேவை
HIGHLIGHTS
50% பக்தர்களுடன் கோயில்களைத் திறப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது அலையாக கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்றாக தற்போது தமிழகத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டு மூன்று நாட்களாக வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதால், தமிழக அரசு நேற்று முன்தினம் பல்வேறு ஊரடங்கு முறைகளை அறிவித்தது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அறிவித்தது. வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
தற்போது தொடர் மழையால் பூ விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசு கோவிலில் திறப்பதற்கு அனுமதி அளிக்காததால், பூ விலை 50 மடங்கு விலை குறைந்தும், பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகளும் வராததால், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் பூ வாங்குவதற்கு வியாபாரிகளும் வராததால் விவசாயிகள் கொண்டு வந்த பூக்கள் 20 ரூபாய் 30 ரூபாய் 50 ரூபாய் என ஒரு கிலோ பூக்களின் விலை சரிந்து போனது.
விலை குறைந்து விற்பனையாகும் பூக்களையும் வாங்குவதற்கும் வியாபாரிகள் வராததால் பூமார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தமிழகஅரசு ஓட்டல், தியேட்டர்கள் உள்ளிட்டவைகளுக்கு 50 சதவீதத்துடன் இயங்குவதற்கு அனுமதி அளித்தது போல் கோயில்களிலும் 50 சதவீத பக்தர்களுடன் அனைத்து நாள்களிலும் திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.