தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக ஈஸ்வரன்..!
தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல்,
இந்தியாவில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொமதேக பொதுச்செயலார் ஈஸ்வரன் எம்எல்ஏ, நாமக்கல் மாவட்ட கொமதேக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தில் முதல் கட்டமாக, ஒரே நாளில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. இதற்காக தேர்தல் கமிஷன், மாவட்ட கலெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட பலரும் மிகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து தரப்பினரும் மிகவும் அமைதியான முறையில் சுமூகமாக தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இது இந்தியாவுக்கே முன்னுதாரணமாகும்.
ஒரு வேட்பாளர் ரூ. 95 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இது மிக அதிகமாகும், சாதாரண வேட்பாளரும் போட்டியிடும் வகையில் செலவு தொகையை குறைத்து நிர்ணயம் செய்யவேண்டும். தற்போது நகர்ப்புறங்களில் சுவர்களில் சின்னம் வரைந்து பிரசாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறை வந்த பிறகு செலவு குறைந்துள்ளது. இதேபோல் கிராமப்புறங்களிலும் சுவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இதனால் பல ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு பாதிக்கப்படுகிறது.
வாக்காளர்கள் ஓட்டளிக்க அவர்களின் வீடுகளுக்கு, அலுவலர்களே நேரில் சென்று பூத் சிலிப் கொடுத்துள்ளனர். வாக்குச்சாவடிக்கு செல்லும் வழி, வாக்குச்சாவடியில் உள்ள நெரிசல் போன்றவற்றை வீட்டில் இருந்தே தேர்தல் கமிஷன் லிங்க்கை பயன்படுத்தி அனைவரும் தெரிந்துகொள்ள முடிகிறது.
இதுபோன்ற நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு அருகில், 200 மீட்டர் தூரத்தில், அரசியல் கட்சிகள் அலுவலகம் அமைத்து, வாக்காளர்களை தடுத்து ஓட்டு சேகரிப்பதும், உதவி செய்வதும் தேவையற்றது. இதனால் வேட்பாளர்களுக்கு வீன் செலவும், வாக்குச்சாவடி அருகில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே இதுபோன்ற சீர்திருத்தங்கள் குறித்து, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைகளை அனுப்ப உள்ளோம்.
தமிழகத்தில் கடும் வெயில் இருந்தும், வாக்களர்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர். இதனால் மாநில அளவில் 72 தவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அகில இந்திய அளவில் சுமார் 35 சதவீதம் பேர் வாக்களிப்பதில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் 35 சதவீதம் பேர் வாக்களிக்காவிட்டால், ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.
எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசுவதை கைவிட்டு, பல வெளிநாடுகளில் இருப்பதைப்போல், தகுதியான வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதில் தகுதி இழக்கச் செய்யவேண்டும். இது குறித்து தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், திமுக மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ்குமார் எம்.பி., மதுரா செந்தில், செல்வகணபதி ஆகியோரின் முழு ஒத்துழைப்புடன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன் பயனாக 2019ம் ஆண்டு தேர்தலை விட, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வேட்பாளர் மாதேஸ்வரன் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றி பெறும். அகில இந்திய அளவிலும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார். நாமக்கல் எம்.பி. சின்ராஜ், கெமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர்.