நாமக்கல் நகராட்சித்தலைவர் பதவியில் மாற்றம்: கட்சியினர் ஏமாற்றம்
நாமக்கல் நகராட்சித் தலைவர் பதவி எஸ்.சி. பொது பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சீட் வாங்கும் கனவில் இருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சி, முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது 39 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அதன்படி, நாமக்கல் நகராட்சி தலைவர் பதவி, எஸ்.சி. பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு டவுன் பஞ்சாயத்தாக இருந்த நாமக்கல், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த நகராட்சித் தலைவர் பதவி தொடர்ந்து பொது பிரிவில் இருந்தது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக இப்போது எஸ்.சி. பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, நகரைச் சுற்றியுள்ள 9 கிராம பஞ்சாயத்துக்கள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால் தற்போது நகராட்சியில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துளள்ளது. அதனால் தற்போது நகராட்சித்தலைவர் பதவி, எஸ்.சி பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், வரும் தேர்தலில் கட்சித்தலைமையிடம் சீட் வாங்கி நகராட்சித் தலைவராகலாம் என்று கனவில் இருந்த பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.