நாமக்கல்லில் திருவள்ளுவர் தின விழா எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு
Tiruvalluvar Day Celebration நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு சிலப்பதிகாரம் புத்தகங்களை வழங்கினார்.
HIGHLIGHTS
Tiruvalluvar Day Celebration
தமிழகத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவள்ளுவர் தினமானது விமர்சையாக கொண்டாடப்படுகிறது. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் போற்றும் வகையில் மாநிலம் முழுவதும் திருவள்ளுவர் தினமானது கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் திருவள்ளுவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் பல மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகத்தினை பரிசாக வழங்குவதும் உண்டு.
திருவள்ளுவர் தினம் என்பது புகழ்பெற்ற தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசால் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் நாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் திருவள்ளுவர் தினவிழா நடைபெற்றது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருவள்ளுவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இலவசமாக சிலப்பதிகாரம் புத்தங்கங்களை அவர் வழங்கினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் மணிமாறன், நகராட்சி கவுன்சிலர் சரவணன், பாவேந்தர் பேரவை செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் ஆறுமுகம், பசுமை தில்லை சிவகுமார் மற்றும் தமிழ் அறிஞர்கள், புலவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.