பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரியசோளிபாளையம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி, மாணவ மாணவிகளும், கிராம மக்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பெரியசோளிபாளையம் கிராம மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பரமத்தி வேலூர் அருகே உள்ள பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், குமாரசாமிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிகளுக்காக பரமத்திவேலூர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள்.
இதுபோல் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரி சென்று வருகின்றனர். இந்த பகுதியில், பேருந்து வசதி இல்லாததால் மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் ஏறத்தாழ 7 கி.மீ., தூரம் நடந்து கபிலர்மலை சென்று பின் அங்கிருந்து பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பு தொழிலாளர்களுக்கும் மற்றும் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
பேருந்து வசதியில்லாதது தொடர்பாக ஏற்கனவே பல முறை புகார் செய்துள்ளோம். எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி பெரியசோளிபாளையம் பகுதிக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.