2 ஆண்டுகளுக்கு பின் விளையாட்டு போட்டி: அரசு பள்ளி மைதானம் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
2 ஆண்டுகளுக்கு பின், பள்ளிகளுக்கு இடையே பாரதியார், குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால், கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிகளுக்கு இடையே ஆண்டுதோறும், நடத்தப்படும் விளையாட்டு, தடகள போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால், மாணவர்களின் திறமை வெளிப்படுத்துவது தடைபட்டது.
தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, பள்ளிகள் முழுமையாக செயல்பட துவங்கின. இதையொட்டி, இந்த ஆண்டு பள்ளிகளுக்கு இடையே, பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள், நாளை (ஆக. 22) முதல் துவங்குகிறது. நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களில், நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, மல்லசமுத்திரம், குமாரபாளையம், ப.வேலூர் ஆகிய எட்டு குறுவட்டங்களில் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. கால்பந்து, வாலிபால், கபடி, ஹாக்கி, கூடைப்பந்து, பாட்மிண்டன், இறகு பந்து, ஏறிபந்து, டேபிள் டென்னிஸ், கேரம், டென்னிகாய்ட், சாஃப்ட் பால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் முதலில் நடைபெற உள்ளன.
அதையடுத்து, மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெறும். வரும், செப்டம்பர் முழுவதும், குழு போட்டிகளும், அதையடுத்து, தடகள போட்டிகளும் நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாளை (ஆக., 22), சாஃப்ட் பால் போட்டி துவங்குகிறது. அதையடுத்து, கால்பந்து போட்டியும் நடக்கிறது. போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படகூடாது என்பதற்காக, மைதானத்தில் உள்ள முட்செடிகளை, டிராக்டர் மூலம் அகற்றி சீரமைக்கும் பணி நடைபெற்றது.