நாமக்கல்: 1,802 மகளிர் குழுவிற்கு ரூ.97.57 கோடி வங்கி கடன் வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில், 1,802 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, ரூ.97.57 கோடி வங்கிக்கடன் உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாநில ஊரகம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கும் விழா நாமக்கல்லில் நடைபெற்றது.
கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாவட்டத்தில் 1,802 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 23 ஆயிரத்து 893 பேருக்கு, ரூ. 97.57 கோடி வங்கிக்கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
அவர் பேசும்போது, நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.416 கோடிஇலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், இதுவரை ரூ. 314.32 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கூறினார். டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், பிஆர்ஓ சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.