பள்ளி மாணவன் தற்கொலை: நீதி விசாரணை கேட்டு பெற்றோர் கலெக்டரிடம் மனு
திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவன் தற்கொலை சம்பவத்திற்கு நீதி விசாரணை கேட்டு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலெக்டர் ஆபீஸ் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகில் உள்ள மோடமங்கலத்தை சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மகன் ரிதுன் (17). அவர், தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவர் ரிதுன், தனது வகுப்பு மாணவி ஒருவரிடம் பேசியுள்ளார்.
அதைப் பார்த்த ஆசிரியர் ஒருவர், மாணவனை கண்டித்துள்ளார். மேலும், இனி இதுபோல் செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த ஆசிரியர் மாணவன் ரிதுனுக்கு, வகுப்பறையைவிட்டு, ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைத்து தண்டனை கொடுத்துள்ளார். இதனால், மனமுடைந்த மாணவன் ரிதுன், பள்ளி அருகில் உள்ள ரயில்வே டிராக்கில் சென்ற ரயில் இன்ஜின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக, ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவரின் பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது, அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன், நீதி விசாரணை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர், கலெக்டரை சந்தித்து மனு அளிக்க முயன்றனர். 5 பேருக்கு மட்டுமே கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் மதியம் 2 மணிக்கு, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஸ்ரேயா சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, இச்சம்பவம் குறித்து சப் கலெக்டர் மூலம் விசாரணை நடத்தப்படும் என, கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
அதை எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5 மணியளவில் சப் கலெக்டர் விசாரணை நகல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம், கலெக்டர் ஆபீஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.