ராசிபுரம் அருகே தனியார் குளுக்கோஸ் ஆலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராசிபுரம் அருகே மங்களபுரத்தில் தனியார் குளுக்கோஸ் ஆலை ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
HIGHLIGHTS
ராசிபுரம் அருகே மங்களபுரத்தில் தனியார் குளுக்கோஸ் ஆலை ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் குளுக்கோஸ் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், ஆலையின் ஒரு பகுதி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அப்பகுதி மக்கள் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று காலை ராசிபுரம் வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன், ஆலை ஆக்கிரமிப்பு பகுதிகள் மற்றும் முறைகேடாக அமைக்கப்பட்டிருந்த கழிவு நீர் குழாய்களையும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.