முட்டை விற்பனையில் சிக்கல்கள்: பண்ணையாளர்கள் நாளை ஆலோசனை
முட்டை விற்பனையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக, நாமக்கல்லில் நாளை பண்ணையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
முட்டை விற்பனையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக, நாமக்கல்லில் நாளை பண்ணையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நாமக்கல் மண்டலத்தில், கோழி முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நாள்தோறும் அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர். ஏற்கனவே என்இசிசி அறிவிக்கும் விலையில் இருந்து பண்ணையாளர்கள் குறிப்பிட்ட அளவு விலையைக் குறைத்து வியாபாரிகளுக்கு அளித்து வந்தனர். இதில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டதால், கடந்த மே 1 முதல் மைனஸ் இல்லாத முட்டை விலையை என்இசிசி அறிவித்து வருகிறது. கடந்த 2 மாதமாக இதை அனைத்து பண்ணையாளர்களும், வியாபாரிகளும் கடைபிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது முட்டை விலை 20 பைசா சரிவடைந்துள்ளதால், சில வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் முட்டை விலையை மேலும் குறைத்து கேட்பதாக என்இசிசிக்கு புகார்கள் வரத்தொடங்கியுள்ளது. நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிகளுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை துவங்கி சிறப்பாக கேரளாவில் பொழிந்து கொண்டிருப்பதால் கேரள மாநில விற்பனை நன்றாக உள்ளது. ஏற்றுமதிக்கான முட்டைகளும் தொடர்ந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்த கோழிகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும் கடந்த காலங்களில் பண்ணைகளில் சராசரி அளவை விட குறைந்த கோழிக்குஞ்சு விடப்பட்டதாலும் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படுகிறது.
பண்ணைகளில் முட்டை உற்பத்தி பற்றாக்குறையாக உள்ள சூழ்நிலையிலும் சில வியாபாரிகள் அறிவிக்கப்பட்ட விலையில் முட்டை எடுப்பதை சீர்குலைக்கும் முயற்சி மேற்கொள்வதாக தெரிய வருகிறது. பண்ணையாளரிடம் மைனஸ் விலை கேட்கும் வியாபாரிகள் குறித்து என்இசிசி மண்டல அலுவலகத்திலோ அல்லது தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்திலோ அலுவலக புகார் செய்யலாம்.
எனவே, இதுகுறித்து ஆலோசனை செய்வதற்காக நாளை 3ம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு, நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்கள் கூட்டம், நாமக்கல் கோஸ்டல் ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து பண்ணையாளர்களும், முட்டை வியாபாரிகளும் கலந்து கொண்டு முட்டை விற்பனையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தங்களின் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்று என்இசிசிசி மண்டல துணைத்தலைவரும், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவருமான சிங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.