அசல் சான்றிதழை கொடுக்க மறுக்கும் தனியார் கல்லூரி: ஆட்சியரிடம் மாணவர்கள் கோரிக்கை
தனியார் கல்லூரியில் இருந்து அசல் கல்வி சான்றிதழை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி முன்னாள் மாணவ மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
HIGHLIGHTS
தனியார் கல்லூரியில் இருந்து அசல் கல்வி சான்றிதழை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி முன்னாள் மாணவ மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம், தனியார் கல்லூரி முன்னாள் மாணவ, மாணவிகள் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும், தனியார் பி.எட் கல்லூரியில் கடந்த 2020-2022ம் ஆண்டில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் முழுக் கல்விக் கட்டண விலக்கு அடிப்படையில் நாங்கள் பி.எட் படிப்பில் சேர்ந்து பயின்றோம்.
கல்லூரியில் சேரும்போது எங்களுடைய 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 கல்வி அசல் சான்றிதழ்களை அந்த கல்லூரியில் ஒப்படைத்துள்ளோம். எங்களுடைய கல்வி ஆண்டு நிறைவடைந்து ஓராண்டாகியும், எங்களின் அசல் சான்றிதழை தனியார் கல்லூரி நிர்வாகம் வழங்க மறுக்கிறது. கல்லூரிக்கு ரூ. 50 ஆயிரம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே கல்விச் சான்றிதழ் வழங்க முடியும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் நாங்கள் உயர்கல்வியில் சேரவோ அல்லது அரசின் போட்டித் தேர்வு உள்ளிட்ட எதற்கும் விண்ணப்பிக்க இயலவில்லை. அதே வேளையில் அசல் சான்றிதழ் இல்லாததால் வேறு தனியார் பள்ளிகளுக்கும் வேலைக்கு செல்லவும் இயலவில்லை. மாவட்ட நிர்வாகம், இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.