தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தை மாற்றி அமைக்கக் கோரி கலெக்டரிடம் மனு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முன் மண்டப பகுதியில் தமிழ்வளர்ச்சித்துறையை மாற்றி அமைக்கக் கோரி தமிழ் ஆர்வலர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
HIGHLIGHTS
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ், தமிழ் ஆர்வலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர், நாமக்கல் மலைக்கோட்டையில், காந்தியடிகள் பேசிய திடலில் இருந்து கலெக்டர் அலவலகத்திற்கு நடைபயணமாக வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் தற்போது, கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில், மாடியில் இயங்கி வருகிறது. அந்த அலுவலகம் இருக்கும் இடம் பலருக்கு தெரிவதில்லை. தமிழக முதல்வர் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். எனவே தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தை, அனைவரும் எளிதில் அணுகும் வகையில், கலெக்டர் அலுவலக மெயின் கட்டிடத்தின் முன் மண்டபத்தில், தரை தளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் ஒரு பகுதியில், இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடுகளில் வெளியிடப்பட்டு புத்தகங்கள், கீழடி அகழாய்வு குறித்த புத்தகங்கள், விடுதலைப்போராட்ட வீரர்கள் வாழ்க்கை வரலாறு, தமிழ் மொழி அகராதிகள் உள்ளிட்ட புத்தகங்களை கண்காட்சியாகவும், விற்பனைக்கும் வைக்கப்பட வேண்டும். கம்ப்யூட்டர் துறை வளர்ச்சிக்கேற்ப கணினி தமிழ் அகராதி, கம்ப்யூட்டரில் பிழை திருத்தும் சாப்ட்வேர்கள் ஆகிவற்றையும் அமைக்க வேண்டும். மேலும் நிரந்தர ஆவணக்கண்காட்சி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.