ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க பெண்கள் கோரிக்கை மனு
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பட்டி பஞ்சாயத்தில் வசிக்கும் சுமார் 150 பெண்கள், காந்தியாவதி ரமேஷ் தலைமையில், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
செல்லப்பம்பட்டி கிராம பஞ்சாயத்தில் மகாத்மா காந்திய தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டுகளாக அரசு அறிவித்துள்ளபடி 100 நாட்கள் முழுமையாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் கிராமப்புறத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத நாட்களையும் சேர்த்து இந்த ஆண்டு 100 நாட்களுக்கும் கூடுதலாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் ஊரக வேலை வாய்ப்பு பணிக்கு அரசு அறிவித்துள்ள நிதியை விட குறைவான தொகையே வழங்கப்பட்டுள்ளது. எனவே பாக்கியுள்ள தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக, செல்லப்பம்பட்டி கிராமத்திற்கு, அரசு பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு வழங்க பஞ்சாயத்து தலைவர் மறுத்து வருகிறார். எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை செய்து எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தொடர்ந்து ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.