பள்ளிபாளையம் பகுதி வளர்ச்சி திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம் நகராட்சி, அன்னை சத்யா நகர் மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளிபாளையம் நகராட்சி, அன்னை சத்யா நகரில் ரூ.22.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 வீடுகளை கொண்ட, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பள்ளிபாளையம் நகராட்சி, அன்னை சத்யா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கன்வாடி மையத்திற்கு வருகை தரும் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்ட விவரங்கள கேட்டறிந்து, நாள்தோறும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை சுகாதார முறையில் தயாரிப்பதுடன், உணவின் தரத்தினையும் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ருஉமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.