பேளுக்குறிச்சியில் நிமோனியா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்
பேளுக்குறிச்சியில், நிமோனியா, மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடும் பணியை எம்எல்ஏ பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக, அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
பின்னர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள படுக்கை வசதி, மருந்துகள் கையிருப்பு, பணியாளர்கள் குறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அப்போது, தற்காலிக பணியாளர்களாக வேலை செய்யும் பெண்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கூறினார்.
நிகழ்ச்சியில், தலைமை மருத்துவர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், திமுக ஊராட்சி செயலாளர் நல்லு ராஜேந்திரன், பங்சாயத்து தலைவர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரசு, சுபாஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.