நாமக்கல், பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: கலெக்டர் நடவடிக்கை
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளை, மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, அபராதம் விதித்து, சீல் வைக்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் ப.வேலூர், பரமத்தி டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் குப்பை கிடங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், பரமத்தியில் ரூ.38.20 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வுகளின் போது வேலூர், குப்புச்சிபாயைம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி திறந்திருந்த அரிசி கடைக்கு அபராதம் விதித்தார். கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புலவர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ஊரடங்கு விதிமுறைகளி மீறி திறக்கப்பட்டிருந்த ஆட்டோமொபைல் கடைகள், லேத் பட்டறைகள், டயர் கடைகள், மற்றும் நாமக்கல் நகராட்சி பகுதிகளில் திறந்திருந்த பழக்கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகளை பார்வையிட்ட கலெக்டர் அவற்றின் உரிமையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் குறித்து அறிவுறுத்தி அபராதம் விதித்தார்.
பின்னர் அந்த கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். ஆய்வுகளில் நாமக்கல் ஆர்டிஓ கோட்டைகுமார், பிஆர்ஓ சீனிவாசன், நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், தாசில்தார்கள் நாமக்கல் ருக்மணி, பரமத்திவேலூர் சுந்தரவள்ளி ஆகியோர் கலந்துகொண்டனர்.