நாமக்கல்: அக்.31 வரை முக்கிய கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தரிசனத்துக்கு தடை
நாமக்கல் மாவட்டத்தில் அக்.31 வரையில் முக்கிய கோயில்களில் வாரத்தில் 3 நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் அக்.31 வரையில் முக்கிய கோயில்களில் வாரத்தில் 3 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கெரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நாட்களில் சமூக இடைவெளியுடன், பாதுகாப்பு வழிமுறைகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிகப்படியாக மக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக். 31 வரை அனைத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கோயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வழக்கமான பூஜைகள் கோயிலுக்குள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும். சிறப்பு பூஜைகள் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.