சஸ்பென்ட் செய்யப்பட்ட அரசு மகளிர் கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக மாணவிகள் சாலை மறியல்
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சஸ்பென்ட் செய்யப்பட்ட முதல்வருக்கு மீண்டும் பணி வழங்கி, அவரையே முதல்வராக நியமிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல் போராட்டம்
HIGHLIGHTS
நாமக்கல் :
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்க கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர் பால் கிரேஸ். அவர், கடந்த ஆண்டு திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றியபோது, அங்குள்ள அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் படத்தை அகற்றியது தொடர்பாக, புகார் எழுந்ததன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். இது சம்மந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு அவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நாமக்கல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய, முதல்வர் பால் கிரேஸ் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், உயர் கல்வித்துறை இயக்குனர் செயலாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கடந்த அக். 19ம் தேதி அவர் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். மேலும், கல்லூரி முதல்வர் பால் கிரேஸ், அவரது சஸ்பெண்ட் சம்மந்தமான விசாரணை முடியும் வரை, நாமக்கல்லில் தங்கியிருக்க வேண்டும். துறை அனுமதி பெறாமல் வெளியூர்களுக்கு செல்லக் கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், தனது சஸ்பென்சனுக்கு எதிராக தடை உத்தரவு (ஸ்டே ஆர்டர்) பெற்றுள்ளதாக தெரிகிறது. இதையொட்டி, நேற்று, நாமக்கல் அரசு மகளிர் கல்லூரிக்கு வந்த பால் கிரேஸ், ஸ்டே உத்தரவு பெற்றுள்ளதால், தனது முதல்வர் பதவியை தன்னிடம் வழங்குமாறு பொறுப்பு முதல்வர் பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இது குறித்து, உயர் கல்வித்துறை இயக்குனரிடம் பேசியபோது, சென்னை கல்லூரிக்கல்வி அலுவலகத்திற்கு வந்து ஸ்டே ஆர்டரை சமர்ப்பிக்கும்படி அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் பால் கிரேஸ் சஸ்பென்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் அவரையே முதல்வராக நியமிக்க வலியுறுத்தியும், கவிஞர் ராமலிங்கம் கல்லூரி மாணவிகள், இன்று காலை 9 மணிக்கு, கல்லூரிக்கு முன்பாக, நாமக்கல்– திருச்சி மெயின் ரோட்டின் குறுக்கே அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி பொறுப்பு முதல்வர் பாரதி அங்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நாமக்கல் சப் கலெக்டர் மஞ்சுளா, தாசில்தார் சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு வந்து மாணவிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாணவிகளின் கோரிக்கையை கல்லூரிக்கல்வி இயக்குனரிடம் தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் நாமக்கல் - திருச்சி மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.