தொடர்மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 22 ஏரிகள் நீர் நிரம்பின
நாமக்கல் மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், 22 ஏரிகள் நிரம்பின; 42 ஏரிகள் தண்ணீரின்றி காலியாகஉள்ளன.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். இந்த ஆண்டில் இதுவரை சுமார் 800 மி.மீ மழைபெய்துள்ளது. இது, சராசரியை விட சுமார் 84 மி.மீட்டர் கூடுதலாகும். இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல், 79 ஏரிகள் உள்ளன. இவற்றில் இதுவரை 22 ஏரிகள் நிரம்பி உள்ளன. மின்னக்கல், சேமூர், அக்கரைபட்டி, கோட்டபாளையம், ஏமப்பள்ளி, மல்லசமுத்திரம் பெரியஏரி, மல்லசமுத்திரம் சின்னஏரி, மாமுண்டி அக்ரஹாரம், தேவனாம்பாளையம், பருத்ப்திபள்ளி, பாலமேடு சின்னஏரி, மாணிக்கம்பாளையம், இலுப்புலி, செருக்கலை, இடும்பன்குளம், துத்திக்குளம், பெரியகுளம், பொம்மசமுத்திரம், சீராப்பள்ளி, எருமப்பட்டி, புதுக்குளம் மற்றும் வரகூர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன.
இதேபோல், நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஏரி 75 சதவீதமும், 3 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 5 ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதமும், 6 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழும் நீர் நிரம்பி உள்ளன. 42 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. அவற்றில் சிறு, பள்ளங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி நிற்கிறது. நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிகளுக்கு நீர் வரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.